நாவரசு கொலையாளி ஜான் டேவிட் விடுதலை மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம்
சிதம்பரம்: சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜான் டேவிட்டை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஜான்டேவிட் மருத்துவக் கல்வி பயின்றார். அங்கு சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரின் மகன் நாவரசு என்ற மாணவரும் மருத்துவக் கல்வி பயின்றார்.
இந்த நிலையில் ஜூனியரான நாவரசை சீனியரான ஜான் டேவிட் கொலை செய்து அவரது உடலை பல துண்டுகளாக வெட்டினார். இந்த வழக்கில் 11.3.98 அன்று ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் டேவிட் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்யுமாறு கடந்த 5.10.01 அன்று உத்தரவிட்டது.
இதையடுத்து ஜான் டேவிட் விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 20.4.11 அன்று செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. தற்போது ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜான் டேவிட்டை விடுதலை செய்யக் கோரி அவரது தாயார் எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது எஸ்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருப்பதால், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். மனுவையும் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.