பரமக்குடி செல்ல சீமானுக்கு போலீசார் அனுமதி மறுப்பு
சென்னை: பரமக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11ம் தேதி பரமக்குடியில் கலவரம் வெடித்தது. இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலியாகினர், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பரமக்குடி செல்ல நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். கலவரப் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் அங்கு செல்ல யாரையும் அனுமதிக்க முடியாது என்று போலீசார் தெரிவி்த்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரமக்குடி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து சீமான் மதுரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.