தமிழக சட்டசபை தீர்மானத்தை விமர்சித்த காஷ்மீர் முதல்வர் மீது வழக்கு
மதுரை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டசபைத் தீர்மானத்திற்கு எதிராகப் பேசிய காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மீது நடவடிக்கை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் கே.நீலமேகம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 பேரின் தூக்குத் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி தமிழக சட்டசபையில், கடந்த 30ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை டிவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலையாளிகள் தண்டனையைக் குறைக்க, தமிழக சட்டசபையில் வலியுறுத்தியது போல, காஷ்மீர் சட்டசபையில், அப்சல் குரு தண்டனையைக் குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றினால், அங்கு கட்சிகள் சும்மா இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென் மண்டல ஐ.ஜி.யிடம் புகார் கொடுத்தேன். வழக்குப் பதிய மத்திய, மாநில அரசுகளிடம் சட்டக் கருத்து கேட்கவும் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, மத்திய அரசு அட்டர்னி ஜெனரல், தமிழக அட்வகேட் ஜெனரலிடம் சட்டக் கருத்து பெற்று, காஷ்மீர் மாநில முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.