பரமக்குடி துப்பாக்கிச் சூடு- திருமாவளவன், ஜான் பாண்டியன் ஆர்ப்பாட்டம்
சென்னை: பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. அதற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், வன்னி அரசு, வெற்றிச் செல்வன், சுப வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திருமாவளவன் பேசியதாவது,
அப்பாவி தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது திட்டமிட்ட தாக்குதல் ஆகும். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் உண்மை வெளியே வராது. எனவே, சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும்.
தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமானால் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
இதோ கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் கட்சியின்
மாநில பொதுச்செயலாளர் முகமது சாதிக், மகளிர் அணி மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.