வீரபாண்டி ஆறுமுகத்துக்கு நிபந்தனை ஜாமீன் - சென்னையில் இருக்க உத்தரவு
திருச்சி: கொலை முயற்சி மற்றும் சதி வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்செந்துர் சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், நில அபகரிப்பு வழக்கில் கைதான மற்றொரு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தூத்துக்குடி நீதிமன்றத்திலும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைத்தது.
வீரபாண்டி ஆறுமுகத்துடன் கைதான 5 பேர் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம் 10,000 ரூபாய் சொந்த ஜாமீனை கீழ் நீதிமன்றத்தில் வழங்கி ஜாமீன் பெற்று கொள்ள அனுமதி அளித்தார். எனவே அவருடன் கைதான மற்றவர்களும் இன்று விடுதலை ஆனார்கள்.
வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னையிலேயே தங்கிருக்க வேண்டும் என வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உத்தரவிடப்பட்டது. வீரபாண்டி ஆறுமுகம் திங்கள்கிழமை சிறையிலிருந்து வெளியே வருவார்.
மற்றொரு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மீதான நில அபகரிப்பு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை, நீதிபதி, சுதந்திரம் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.