பரமக்குடி துப்பாக்கிச்சூடு: நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பவிருக்கும் பாஜக
சென்னை: பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்பப்போவதாக பாஜக எம்.பி.க்கள் குழு தெரிவித்துள்ளது.
பாஜக எம். பி. க்கள் அர்ஜூன்ராம் மேக்வால், டாக்டர் கிரித்சோலங்கி, பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ராம்நாத் கோவிந்த் ஆகியோர் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளன்று பரமக்குடி, மதுரையில் துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களை நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
அதன் பின்னர் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து அர்ஜூன்ராம் மேக்வால், ராம்நாத் கோவிந்த் ஆகியோர் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் கலவர சூழ்நிலை இருப்பது அனைவரும் அறிந்தது. இருப்பினும் போலீசார் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டைத் தவிர்க்க பல வழிகள் இருந்தும் அவர்கள் அதை பின்பற்றவில்லை.
பேலீசாரின் தவறான நடவடிக்கையால் 6 தலித் இளைஞர்கள் பலியாகினர். இதை தமிழக காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் தோல்வி என்றே தான் கூற வேண்டும். இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் தொகுதிக்கு அருகில் தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இருப்பினும் அவர் மவுனமாக உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பிரச்சனையை எழுப்புவோம். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களையும், அந்த இடங்களையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்க்க வேண்டும். ராமநாதபும் மாவட்டத்தில் அமைதிக் குழுக்கள் அமைக்க வேண்டும், பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றனர்.
பேட்டியின் போது தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
20-ம் தேதிக்கு பிறகு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு:
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 20-ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என்று அக்கட்சியின் மாநில துணை தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் ஊழல்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 100 டாலர் வரை விற்பனையானது. அது தற்போது 88 டாலராக குறைந்துள்ளது. ஆனால், சர்வதேச சந்தையை காரணம் காட்டி பெட்ரோல் விலை ரூ. 3. 14 உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் 23-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிட வேண்டும்.
மாவட்டம் தோறும் பாஜக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 20-ம் தேதிக்கு பிறகு தேர்தல் பொறுப்பாளர்கள் குழு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்றார்.