பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தே.மு.தி.க. நிதியை வாங்க மறுப்பு
பரமக்குடி: பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தே.மு.தி.க., நிதியை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், முத்துராமலிங்கபுரம் பள்ளப்பசேரி கிராமத்தைச் சேர்ந்த பழனிக் குமார் தங்கவேல் என்ற தலித் மாணவனை ஒரு கும்பல் படுகொலை செய்தது.
மேலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை போலீசார் கைது செய்தனர். இதனால் தென் மாவட்டத்தில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. இதில் பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர்.
அவ்வாறு, துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 17 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பரமக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 ஆயிரம் வழங்கப்படும் என தே.மு.தி.க. அறிவித்திருந்தது.
இக் கட்சியின் பொருளாளர் சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமையிலான குழு, பரமக்குடி அடுத்த பார்த்திபனூர் சென்று, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 ஆயிரம் கொடுக்க முயன்றனர்.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் பரமக்குடி கலவரம் குறித்து தே.மு.தி.க. சார்பில் பேசிய பண்ருட்டி ராமசந்திரன், கலவர சம்பவம் நீதி விசாரணை தேவையில்லை என கருத்து தெரிவித்தார். இதனால் தாங்கள் தேமுதிக நிதியை பெற விரும்பவில்லை என கூறி நிதியை பெற மறுத்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் சமாதான பேச்சுவார்த்தை தேமுதிக நிர்வாகிகள் நடத்தியும் அவர்கள் அந்த பணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் தே.மு.தி.க.-வினர் திரும்பி சென்றனர்.