கூடன்குளம் மக்களிடம் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சமூக ஆர்வலர் மேதா பட்கர்
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், "ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் புதிதாக அணுமின் நிலையகங்களைத் துவங்குவதை நிறுத்திவிட்டன. அணுமின் நிலையங்களால் ஏற்பட்ட சீரழிவுகள் தான் அவர்களை இந்த முடிவு எடுக்க வைத்துள்ளது.
இதில் இருந்து இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அணுமின் நிலையம் துவங்கும் முன்பு அப்பகுதி மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கூடன்குளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
அணு சக்தியால் உலகமே பேராபத்தை சந்திக்கவிருக்கிறது. இதை மத்திய அரசு உணர்ந்து செய்லபட வேண்டும். போராடி வரும் மக்களை சந்தித்து நானும் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன். தொடர் போராட்டம் நடத்தி வரும் அப்பகுதி மக்களிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
கூடன்குளம் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்க ஜெயலலிதா மத்திய அரசிடம் பேச முன்வர வேண்டும்," என்றார்.