கேரள சட்டசபை கட்டிடத்திற்கு ரூ. 20 கோடி வரி பாக்கி: முதல்வர், சபாநாயகருக்கு மேயர் நோட்டீஸ்
திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கட்டிடத்திற்கு ரூ. 20 கோடி வரி பாக்கி உள்ளதாகவும், அதனை உடனே செலுத்தும்படியும் முதல்வர், சபாநாயர் அலுவலங்களுக்கு சென்று திருவனந்தபுரம் மேயர் நோட்டீஸ் கொடுத்தார்.
கேரள சட்டசபை மற்றும் தலைமை செயலகம் திருவனந்தபுரத்தில் சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கட்டிடத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் சட்டசபைக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிடமாகும். ஆனால் இந்த கட்டிடத்திற்கு உரிய வரியை இதுவரை திருவனந்தபுரம் மாநகராட்சி்க்கு செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதுவரை ரூ. 20 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வரி பாக்கியை வசூலிக்க திருவனந்தபுரம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வரி பாக்கிக்கான நோட்டீஸை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் சந்திரிகா சபாநாயகர் கார்த்திகேயனின் அலுவலகத்திலும், முதல்வர் உம்மன்சாண்டி அலுவலகத்திலும் நேரில் சென்று கொடுத்தார்.