விநாயகரை அவமதித்து நாடகம்- அடங்காத ஆஸி. இனவெறி- இந்துத் தலைவர்கள் கொந்தளிப்பு!
ஆஸ்திரேலியாவின் இனவெறி உலகம் அறிந்தது. தங்களைத் தவிர உலகில் யாருமே உயர்ந்தவர்கள் இல்லை, புத்திசாலிகள் இல்லை, திறமைசாலிகள் இல்லை என்பது அவர்களது 'தாழ்மையான' கருத்தாகும். ஏன், இங்கிலாந்துக்காரர்களையே கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள். ஆசியர்களைப் பார்த்தாலே அவர்களுக்குப் பற்றி எரியும். அப்படி ஒரு நல்ல மனசுக்காரர்கள் ஆஸ்திரேலியர்கள்.
இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தலைவிரித்தாடிய இனவெறித் தாக்குதல்கள், படுகொலைகள் இந்தியர்களால் மறக்க முடியாததாகும். இந்த நிலையில் மீண்டும் இந்தியர்களை சீண்டும் ஒரு செயலைச் செய்துள்ளனர் ஆஸ்திரேலியர்கள்.
இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்கும் விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு நாடகத்தை உருவாக்கியுள்ளனர் மெல்போர்ன் நகரில். அங்கு தொடங்கும் விழா ஒன்றில், கணேஷ் வெர்சஸ் தேர்ட் ரீச் என்ற பெயரில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. கீலாங்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த நாடகத்தை தயாரித்துள்ளது.
இதில், விநாயகரை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் கைது செய்து விசாரிப்பது போல காட்சியை வைத்துள்ளனர். அதாவது தனது ஸ்வஸ்திக் சின்னத்தை விநாயகர் திருடி விட்டதாக கூறி ஹிட்லரின் உத்தரவுப்படி விநாயகரை கைது செய்து விசாரிக்கின்றனறாம்.
இந்த நாடகம் குறித்து மெல்போர்ன் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தக் கொழுப்புத்தனத்தைப் பார்த்து இந்துக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இந்து மதத் தலைவர் ராஜன் ஜெத் இதுகுறித்து கூறுகையில், இந்த நாடகம் மெல்போர்ன் விழாவில் நடத்தப்படவுள்ளது அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது.
இந்துக் கோவில்களிலும், வீடுகளில் உள்ள ஆலயங்களிலும் வைத்து வணங்கப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். அவரை அனைவரும் பார்த்து சிரித்துக் கேலி செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது வேதனை தருகிறது.
விநாயகர் புனிதமானவர். அவரது உண்மையான புனிதத்தை சித்தரிக்கும் வகையில் திரைப்படமோ, நாடகமோ அல்லது நிகழ்ச்சிகளோ அமைந்தால் அதை இந்துக்கள் வரவேற்பார்கள். மாறாக இதுபோல கேலிச் சித்திரமாக அவரை சித்தரிக்க முயன்றால் அதை ஏற்க முடியாது.
இந்த நாடகத்தில் நாஜிக்களின் உளவுப் படையினர் விநாயகரை கைது செய்து சித்திரவதை செய்வது போலவும், விசாரிப்பது போலவும் காட்சிகளை அமைத்துள்ளதாக தெரிகிறது. இது நிச்சயம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கடுமையாக பாதிக்கும் என்றார்.
இந்த சர்ச்சைக்குரிய நாடகத்தை தயாரித்துள்ள நிறுவனத்தின் செயல் தயாரிப்பாளர் ஆலிஸ் நாஷ் என்பவர் கூறுகையில், இது இந்துக்களின் உணர்வுகளை பாதிக்கும் அளவுக்கு இருக்காது என்றே நம்புகிறோம். அதுபோலத்தான் கதையை உருவாக்கியுள்ளோம். மேலும் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று உள்நோக்கத்துடன் நாங்கள் இந்த கேரக்டரை உருவாக்கவில்லை.
சின்னங்கள் மூலமாகவும், சம்பிரதாயங்கள் மூலமாகவும் எப்படிக் கதை சொல்வது என்பதைத்தான் இந்த நாடகம் மூலம் நாங்கள் விளக்குகிறோம். இந்துக்களின் கடவுளான விநாயகரை பார்த்து யாரும் சிரிக்கும் வகையில் நாடகத்தில் காட்சிகள் இல்லை. நிச்சயம் அப்படி இருக்காது என்றார்.
செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 9ம் தேதி முதல் இந்த நாடகத்தை மெல்போர்ன் விழாவில் நடத்தவுள்ளனராம்.