ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சியில் சேருகிறார் ஜான் பாண்டியன்
லோக் ஜன் சக்திக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக ஜான் பாண்டியன் நியமிக்கப்படவுள்ளார்.
தென் தமிழகத்தின் புதிய தலித் சக்தியாக ஜான் பாண்டியன் உருவெடுத்துள்ளார். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் தற்போது தேசியக் கட்சியில் இணைகிறார் ஜான் பாண்டியன். வட இந்தியாவின் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வான் நடத்தி வரும் லோக் ஜன் சக்தி கட்சியில் ஜான் பாண்டியன் தனது ஆதரவாளர்களோடு இணைகிறார். அக்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த முடிவு பாஸ்வானின் மதுரை விஜயத்தின்போது எடுக்கப்பட்டது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து பாஸ்வான் அறிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மதுரை வந்தார். மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது ஜான் பாண்டியனும் உடன் இருந்தார்.
அதன் பின்னர் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது தனது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைக் கலைத்து விட்டு பாஸ்வான் கட்சியில் ஜான் பாண்டியன் இணைவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
விரைவில் இந்த இணைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இணைப்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவுக்கு பாஸ்வான் கண்டனம்:
இந் நிலையில் பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தி பேசுவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராம் விலாஸ் பாஸ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சமூக நீதிக்கு முன்னோடியாக இருந்த தமிழகத்தின் நற்பெயர் தலித்துகள் கொல்லப்பட்டதில் சிதைந்துபோய் விட்டது.
தமிழகத்தில் தலித்துகள் நல்லமுறையில் வாழ்கிறார்கள் என்று அதிக மதிப்பு வைத்திருந்தேன். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன் என்றார்.