அப்பாடா.. ஒருவழியாய் வெளியே வந்தார் வீரபாண்டி ஆறுமுகம்!
இதில் ஜாமீன் பெற்ற நிலையில், அவர் மீது சேலத்தை சேர்ந்த நகைக்கடை அதிபர் பிரேம்நாத் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
மொத்ததில் கடந்த 6 வாரமாக அவர் சிறையில் இருந்தார். இந் நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய. சென்னையில் தங்கி இருந்து தினமும் பூக்கடை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தை ஜாமீனில் எடுக்க சேலம் 4-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ஜாமீன் உத்தரவை வழங்கினார்.
இந்த உத்தரவு நகல் இன்று தபால் மூலம் திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்ததையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் இன்று பகலில் விடுதலையானார். அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சேலம் அதிமுக வழக்கறிஞர் மணிகண்டன், போலீசாரிடம் வீரபாண்டி ஆறுமுகம் மீது புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் புகார் அல்லது வேறு ஏதாவது வழக்கில் வழக்கம்போல் அவரை போலீசார் மீண்டும் கைது செய்யலாம் என்றும் திமுகவினர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
பொன்முடி ஜாமீன் மனு தள்ளுபடி:
இந் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
திருவாரூரில் வாக்காளர்களுக்கு தி.மு.க. சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் கடந்த ஜுன் மாதம் 6ம்ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தரக்குறைவாக பேசியதாக அ.தி.மு.க. நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி திருவாரூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் பொன்முடி மீது கொலை மிரட்டல், தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 15ம் தேதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில், திருவாரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், அதை தள்ளுபடி செய்தார்.