விருப்பம்போல் கட்டணம் வசூலிக்க அனுமதி வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை
சென்னை: திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியை தமிழக அரசு உயர்த்த கூடாது, என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், சென்னையில் நேற்று காலை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு தற்போது மாநகராட்சிகளுக்கு 30 சதவீதமாகவும், மற்ற ஏரியாக்களுக்கு 20 சதவீதமாகவும் விதித்துள்ள கேளிக்கை வரியினை திரையரங்குகளின் இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா 10 சதவீதமாக குறைத்து வழங்க வேண்டும்.
அந்த கேளிக்கை வரியை திரையரங்குகளின் நுழைவு கட்டணத்தில் இருந்து சேர்த்து வசூலித்து கொள்ளவும் முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறோம்.
திருட்டு வி.சி.டி.யை அறவே ஒழிக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள சரித்திர சிறப்புமிக்க நடவடிக்கைக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறோம்.
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சி காலத்தில் ஆணையிட்டு வழங்கியதைப்போல் புதிய திரைப்படங்கள் வெளியான முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகளுக்கான நுழைவு கட்டணத்தை திரையரங்குகளே நிர்ணயித்துக்கொள்ள மீண்டும் அனுமதி அளித்து ஆணை வெளியிடும்படி, தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மான விவரங்களை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, நிருபர்கள் மத்தியில் படித்தார்.
அப்போது சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், இணை செயலாளர் ஸ்ரீதர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பு தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், கில்டு தலைவர் ஹேம்நாக்பாபு, டைரக்டர்கள் சங்க துணைத்தலைவர் சேரன், செயலாளர் அமீர், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.