கோவையில் நில அபகரிப்பு புகாரின் பேரில் ரூ. 7.19 கோடி நிலம் மீட்பு - கமிஷனர் தகவல்
கோவை: கோவையில் நிலஅபகரிப்பு புகாரின் பேரில் 7.19 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக கோவை போலீஸ் கமிஷனர் அம்ரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமிஷனர் அமரேஷ் புஜாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, நிலஅபகரிப்பு தொடர்பான புகார்களை என்னிடமும் (கமிஷனரிடம்) கொடுக்கலாம். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும்.
சமீப காலமாக சிவில் தொடர்பான மனுக்கள் அதிகமாக வருகின்றன. எனவே, நிலஅபகரிப்பு தொடர்பான புகார் மனுக்களை பரிசீலக்க போலீஸ் கமிஷனர், துணை கமிஷனர் (தலைமையிடம்) விவேகானந்தன், உதவி கமிஷனர் (நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு) செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஒவ்வொரு வாரமும் கூடி, புகார் மனுக்களை பரிசீலித்து சிவில் சம்பந்தப்பட்ட மனுக்களை தனியாக பிரித்து, புகார் தாரர்களை அழைத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர அறிவுறுத்தப்படும். மோசடி சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் விசாரித்து, எப்.ஐ.ஆர். நகல் வழங்கப்படும்.
கோவை மாநகர போலீசார் இதுவரை 269 நிலஅபகரிப்பு புகார் மனுக்களை பெற்றுள்ளனர். இதில் 132 மனுக்கள் சிவில் சம்பந்தப்பட்டவை, ஏழு மனுக்கள் பிற மாவட்ட போலீஸ் விசாரணை சம்பந்தப்பட்டவை.
இவற்றில் 40 மனுக்கள் விசாரிக்கப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 176 புகார் மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. கோவை மாநகரில் நில அபகரிப்பு புகாரின் பேரில் 7.19 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.