கசாபிற்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடவிருக்கும் மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன்
டெல்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபிற்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமசந்திரன் வாதாடவிருக்கிறார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் கடந்த மே மாதம் பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கசாப் மும்பை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தான். அவனது மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது. மும்பை உயர் நீதிமன்றமும் கசாபின் மரண தண்டனையை உறுதிசெய்தது.
இதையடுத்து கசாப் உச்ச நீதிமன்ற்ததில் மேல் முறையீடு செய்யவிருக்கிறான். அதற்காக தனது சார்பில் வாதாட ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு கசாப் இலவச சட்ட மையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதன்படி கசாப்பின் மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாதாட உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.