கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலை அடுத்து காலரா, மஞ்சள் காமாலை பரவுகிறது
திருவனந்தபுரம்: கேரளாவில் எலிக்காய்ச்சலை அடுத்து, காலரா, மஞ்சள் காமாலை நோய்களும் பரவ ஆரம்பித்துள்ளன.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. நோய் கண்டறிந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 7 பேர் கடந்த புதன்கிழமை இறந்தனர். இந்நிலையில் எலிக்காய்ச்சலின் தாக்கம் மெதுவாக மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
எர்ணாகுளம், கோட்டயம், காசர்கோடு மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எலிக்காய்ச்சல் தாக்கியவர்களில் சிகிச்சை பலனின்றி, மாநிலத்தில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளதாக மாநில அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சிகிச்சையில் உள்ள 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எலிக்காய்ச்சலை கண்டறிந்து சிகிச்சை பெற அதிகளவில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் பகுதியி்ல் தற்போது காலரா மற்றும் மஞ்சள் காமாலை பாதித்து சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. காலரா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கோழிக்கோடு மருத்துவமனையி்ல் இறந்தார். மேலும் சிகிச்சையி்ல் உள்ள சிலரது நிலைமை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.