அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லத் தேவையில்லை: ஆணையர் அய்யர்
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது,
தனித் தொகுதிகளை அரசு தான் ஒதுக்க வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் பணியல்ல. வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் அலுவலகத்தில் உள்ள விளம்பரப் பலகைகளில் தனித் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள் இருக்கும். அரசியல் கட்சிகள் எது கூறினாலும் அதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் பதில் சொல்லத் தேவையில்லை.
கடந்த 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, இம்முறை வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமான முறையிலும் நடக்கும் என்றார்.
வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க தடை விதிக்கணும்: குரேஷி
இதற்கிடையே, வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட குரேஷி பேசியதாவது,
தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஸ்பான்சர் செய்யப்படுபவை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதை பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்தியாகவே கருதலாம். ஒவ்வொரு செய்தி சேனலும் ஒவ்வொரு கருத்துக் கணிப்பை வெளியிடுகின்றன. அவற்றில் அவ்வளவு வித்தியாசம் உள்ளன. எனவே, கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இது தவிர வீடு, வீடகாச் சென்று பிராசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறு வீடு, வீடாகச் செல்லும்போது தான் பணம், மது போன்றவை வினியோகிக்கப்படுகின்றன. இது குறித்து வாக்காளர்கள் இடையே விழி்ப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடங்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஊடகங்களின் பங்கினால் தான் டெல்லியிலும், பீகாரிலும் அதிக அளவில் வாக்குப்பதிவு நடந்தது.
ஊடகமும், தேர்தல் ஆணையமும் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றி ஆரோக்கியமான, வெளிப்படையான, நேர்மையான ஜனநாயகத்தை கட்டமைக்க வேண்டும்.
தேர்தல் சீர்திருத்தங்கள் செய்கையில் குற்றப் பின்னணி இல்லாத வேட்பாளர்களை தேர்வு செய்வதை குறிக்கோளாக கொள்ளவேண்டும். தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேச்சு எடுக்கையில் எம்.பி.க்கள், எம். எல். ஏ.க்களை திரும்பப் பெறுவது என்பது போன்ற ஆலோசனைகள் கூறப்படுகின்றன, புகார்களும் தெரிவிக்கப்படுகின்றன.
இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் எம்.பி.க்களைத் திரும்பப் பெறுவது சாத்தியமல்ல. லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்தவர்களை திரும்பப் பெறுவது ஒன்றும் எளிதன்று. அப்படி ஒரு உரிமை அளிக்கப்பட்டால் தேர்தல் நடைமுறையே சீர்குலைந்துவிடும். மேலும், வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை அளிப்பதும் கடினம் என்றார்.