உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கலில் குழப்பம்- படிவம் தயாராகாததால் கட்சியினர் குழப்பம்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தேதி இரவோடு இரவாக அறிவிக்கப்பட்டதால் அதிகாரிகள் வேட்பு மனு தாக்கலுக்கு தயாராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வேட்பு மனுத் தாக்கலுக்கான படிவம் கிடைக்கவில்லை. பொதுத் தொகுதி எது, இட ஒதுக்கீ்ட்டுத் தொகுதி எது என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அரசியல் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை நேற்று இரவு திடீரென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இன்று முதலே வேட்பு மனுத் தாக்கல் தொடங்கும் என்றும் அறிவித்தது. இங்குதான் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் திடீரென தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பு மனுக்களை வாங்கும் அதிகாரிகள் தடுமாறிப் போய் விட்டனர். பலர் தயாராக இல்லாத நிலையில் காணப்பட்டதால் வேட்பு மனு படிவங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மனு செய்ய வந்தவர்கள் படிவம் இல்லை என்று வந்த பதிலால் குழப்பமடைந்துள்ளனர்.
மேலும் பொதுத் தொகுதி எது, தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதி, பெண்களுக்கான தொகுதிகள் எவை என்பதும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
அதேபோல வார்டுகளின் எல்லை மாற்றங்களும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.
இந்தக் குழப்பம் காரணாக வேட்பு மனுதாக்கலின் முதல் நாளான இன்று பல பகுதிகளில் வேட்பு மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.