தேமுதிகவுக்கு தலித்களிடையே எதிர்ப்பு வலுக்கிறது- மேலும் ஒரு ஊரில் கட்சி கலைப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேசிய விதம், கட்சித் தலைவர் விஜயகாந்த், பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராதது ஆகியவை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட தலித் மக்களிடையே தேமுதிகவுக்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் ஒரு ஊரில் கட்சியைக் கலைத்து விட்டனர் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை தேவையில்லை என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியிருப்பது தமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆறுதல் கூற முன்வரவில்லை. காயமடைந்தவர்களை மட்டும் பார்த்து விட்டு அவர் பரமக்குடி வராமல் போய் விட்டார்.
இதனால் தேமுதிகவைச் சேர்ந்த தலித் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தார்கள். விஜயகாந்த்தையும், பண்ருட்டியையும் கண்டித்து காரனேந்தல் என்ற கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தேமுதிகவினர் ஒன்று கூடி கட்சிக் கொடி, வேட்டிகள், உறுப்பினர் அட்டைகளை தீவைத்துக் கொளுத்தினர். கட்சிக் கொடிக் கம்பத்தையும் வெட்டிச் சாய்த்தனர்.
இந்த நிலையில் அருகில் உள்ள வன்னிவயல் என்ற கிராமத்திலும் கட்சியைக் கலைத்து விட்டனர்,. கட்சிக் கொடிகள், உறுப்பினர் அட்டைகளை பெரும் திரளாக கூடிய தேமுதிகவினர் தீவைத்து எரித்தனர். இனிமேல் இந்தஊரில் தேமுதிகவுக்கு இடமில்லை என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கு தேமுதிக சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை அக்குடும்பத்தினர் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.