அதிமுக கூட்டணிக்கு முழுக்கு.. அடுத்தபடியாக புதிய தமிழகம்...!
நிருபர்களிடம் அவர் பேசுகையில், பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் சட்ட விரோதமானது. போலீஸ் முதலில் தடியடி, பின்பு கண்ணீர் புகை அதன் பின்னர் தான் துப்பாக்கி சூடு நடத்தும். ஆனால், எடுத்தவுடனேயே போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தியது காவல்துறை ரவுடிமயமாகிவிட்டதாகத் தெரிகிறது.
துப்பாக்கி சூடு சம்பவம் காரணமாக அமைக்கப்பட்ட ஒரு நபர் நீதிபதி சம்பத் கமிஷனால் எந்தப் பலனும் இல்லை. பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் குழுவைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து விசாரிக்க வேண்டும்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது அரசியல் சீர்குலைவை காட்டுகிறது. முதல் நாள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மறு நாள் வேட்பு மனு தாக்கல் அறிவிப்பது மூடு மந்திரம் போல் உள்ளது.
புதிய தமிழகம் தென் மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கிகள் கொண்ட அமைப்பு. கூட்டணி கட்சி என்கிற முறையில், எங்களை (அதிமுக) கலந்து ஆலோசிக்கவில்லை. வரும் உள்ளாட்சி தேர்தலில் அது எதிரொலிக்கும். வரும் 25ம் தேதி புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவெடுக்க உள்ளோம் என்றார்.