நெல்லை திமுக கோட்டை என்பதை நிரூபிப்பேன்: திமுக மேயர் வேட்பாளர் அமுதா உறுதி
நெல்லை: இந்த தேர்தலில் வெற்றி பெற்று நெல்லை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்பேன் என்று நெல்லை மேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சி நெல்லை, தச்சநல்லூர், மேலப்பாளையம், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களை உள்ளடக்கியது. இதில் 55 வார்டுகள் உள்ளன. 1996-ம் ஆண்டு நெல்லை மாநகராட்சிக்கு முதன் முதலாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி மேயராக உமா மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயராணி மேயரானார்.
2006-ல் நெல்லை மாநகராட்சியின் 3வது மேயராக 3முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ஏ.எல். பாலசுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சி திமுக வேட்பாளராக அமுதா அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ. படித்துள்ள இவர் நெல்லை மாநகராட்சி, பாளை மண்டல தலைவர் சுப சீதாராமனின் மகள். பாளை சிவன் கோயில் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இவர் இந்து யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இவரது கணவர் சுந்தரம் நெல்லை மதிதா இந்து கல்லூரியில் தமிழ்துறை பேராசிரியராக பணியாற்றுகிறார். ஒரே மகள் சுபஸ்ரீ பிஇ படித்தவர். அமுதா ஆரம்பகாலத்தில் இருந்தே திமுகவில் தான் உள்ளார். கடந்த 96-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சியின் 22வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மேயர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து அமுதா கூறுகையில்,
நெல்லை மாநகராட்சி தற்போது திமுக வசம் உள்ளது. இந்த தேர்தலில் மேயராக போட்டியிட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நெல்லை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்பேன் என்றார்.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மதிமுகவும் களம் இறங்கியுள்ளது. மதிமுக வேட்பாளராக மகேஸ்வரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 10-ம் வகுப்பு படித்துள்ளார். நெல்லை டவுன் வெள்ளத்தாங்கி பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த அவர் இந்து யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர். அவரது கணவர் நடராஜன் பேட்டை பகுதி மதிமுக இலக்கிய அணி பொறுப்பாளர். அவரது மகள் பிரியாங்கா 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
திமுக, அதிமுக, மதிமுக மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் நெல்லை மாநகராட்சி தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.