மணல் கொள்ளை மூலம் 5 வருடத்தில் ரூ. 1000 கோடி சம்பாதித்த கே.சி.பழனிச்சாமி
கரூர் எம்.பியாக இருந்தவர் கே.சி.பழனிச்சாமி. தற்போது அவர் அரவாக்குறிச்சி எம்.எல்.ஏவாக உள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் இவர் தான் தமிழகம் முழுவதும் பெருமளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பகிரங்கமாகவே பேசிக் கொண்டனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாயனூரில் வைத்து இவரைப் போலீஸார் கைது செய்தனர். 8 பிரிவுகளில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தற்போது போலீஸ் விசாரணையில் கே.சி.பியின் மணல் கொள்ளை குறித்த பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் மணல் கொள்ளை நடந்து வந்தாலும், அதில் கேசிபிதான் ராஜா போல திகழ்ந்துள்ளார் என்று போலீஸார் கூறுகிறார்கள். தமிழகத்திலேயே பெருமளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் இவர் மட்டும்தான் என்கிறது போலீஸ் வட்டாரத்தகவல்கள்.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட அதன் சுற்றுச்சூழலே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அளவில் மணலை சட்டவிரோதமாக அள்ளி பணம் பார்த்துள்ளாராம் கேசிபி.
மணல் கொள்ளை மூலம் கிட்டத்தட்ட ரூ. 238 கோடி அளவுக்கு பணம் பார்த்துள்ளார். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இவருக்கு ரூ. 1000 கோடி அளவுக்கு சொத்து எகிறியுள்ளது. இத்தனையும் மணல் கொள்ளை மூலம் சம்பாதித்ததாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
காவிரி மணல் படுகையில் கிட்டத்தட்ட 350 ஏக்கர் பரப்பளவில் மணலை வாரி எடுத்துள்ளனர் கேசிபியும் அவரது கூட்டாளிகளும். அரசு கணக்குப்படி அவர் ரூ. 49 கோடி அளவிலான மணலைத்தான் அள்ளியுள்ளார். ஆனால் வெளிச் சந்தையில் விற்ற வகையில் மட்டும் இந்த ரூ. 238 கோடியை அவர் பார்த்துள்ளார்.
காவிரி ஆறு மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து ஆற்றுப் பகுதிகளிலும் கேசிபியின் மணல் கொள்ளை வியாபித்திருந்ததாக கூறப்படுகிறது.
மனவாசி கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரிலேயே தற்போது கேசிபியும் அவரது கூட்டாளிகளான சுந்தரேசன், கிரிராஜ், ரவிராஜா, ராஜா, சசிக்குமார், குமார் ஆகியோரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.