புகுஷிமா அணு உலைகளை 'ரோக்' புயல் தாக்கியது-பாதிப்பில்லை என தகவல்
தலைநகர் டோக்கியோவை முதலில் இந்தப் புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக டோக்கியோ, புகுஷிமா உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மழையும் பெய்தது.
மத்திய ஜப்பானில் உள்ள கிஹோ என்ற நகரிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது இந்த ரோக் புயல். ஹோன்ஷு தீவில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். அங்கு பெரும்பாலான இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ஹோன்ஷு தீவில் புயலுக்கு இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 7 பேரைக் காணவில்லை.
கன மழை மற்றும் பலத்த காற்றுடன் ரோக் புயல் தாக்கியதால் ஜப்பான் மீண்டும் ஒரு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. ரயில் போக்குவரத்து, வாகனப் போக்குவரத்து டோக்கியோவில் முடங்கியுள்ளது. வி்மான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புல்லட் ரயில் ஓடவில்லை.
சமீபத்தில்தான் தலாஸ் என்ற புயல் ஜப்பானைத் தாக்கியது. இந்த நிலையில் தற்போது ரோக் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தலாஸ் புயலுக்கு 106 பேர் பலியானார்கள்.
புகுஷிமாவை ரோக் புயல் தாக்கியிருப்பதால் தற்போது ஜப்பானியர்களிடையே பெரும் பீதி நிலவுகிறது. கடந்த மார்ச்11ம் தேதி புகுஷிமாவை நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதனால் புகுஷிமா அணு உலைகள் சேதமடைந்தன. சில அணு உலைகள் கடும் வெப்பத்தால் உருகின. அதிலிருந்து கதிர்வீச்சு வெளியானது. அதை சரி செய்ய கடுமையாக போராடினர் ஜப்பானிய விஞ்ஞானிகள்.
இந்த நிலையில் புகுஷிமாவை புயல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அணு உலைகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கதிர்வீச்சு வெளியாக வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.