5 வயது மாணவியைக் கொலை செய்த பூசாரி வீட்டில் எலும்புக் கூடு- வேறு சிலரும் கொலை?
குடியாத்தம்: குடியாத்தம் பள்ளி மாணவி ராஜேஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பூசாரி குமாரின் வீட்டில் எலும்புக்கூடும், நூற்றுக்கணக்கான பீர் பாட்டில்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வரும் ராஜாவின் மகள் ராஜேஸ்வரி. அருகில் உள்ள இந்திராகாந்தி நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை காலை பள்ளிக்கு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து தேடிப்பார்த்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீசார் ஊர் முழுவதும் தேடிப்பார்த்த போது ராஜேஸ்வரியின் சடலம் பாழும் கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக ஆஞ்சநேயர் கோவில் பூசாரி குமார் என்பவரை கைது செய்தனர்.
அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் திங்கட்கிழமையன்று பள்ளி வாசலில் நின்றிருந்த குழந்தையை சாக்லெட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குழந்தை சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் தெரிவித்தான். இதனையடுத்து போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.
குமாரின் வீட்டை சோதனை செய்தபோது அங்கு நூற்றுக்கணக்கான பீர் பாட்டில்களும், சிறிய எலும்புக்கூடு ஒன்றும் இருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டின் மொட்டை மாடியில் 12 அடி நீளத்திற்கு மணல் மேடு ஒன்றும் இருப்பதால் அதிலும் யாரையாவது கொன்று புதைத்து வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். வீட்டை பூட்டிய போலீசார் குமாரிடம் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளியை மூட கோரிக்கை
ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளிக்குச் செல்ல மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். எட்டாம் வகுப்பு வரை மாணவிகள் படிக்கும் பள்ளியில் கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததே மாணவிகளின் உயிரிழப்புக்குக் காரணமாகிவிட்டதாக குடியாத்தம் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக பள்ளியை மூடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாணவி ராஜேஸ்வரியை கொலைசெய்ய பூசாரியை எந்த காரணத்தைக் கொண்டும் தப்ப விடக் கூடாது என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.