வேட்பு மனு தாக்கல் செய்வது எப்படி?-மதுரை கலெக்டர் அறிவிப்பு
மதுரை: மதுரையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கசாயம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சகாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்களிடமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட நகராட்சியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலரிடமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களான இணை இயக்குனர்களிடம் அவர்களது அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உதவி இயக்குனர் நிலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் மனுத்தாக்கல் செய்யலாம்.
சிற்றூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள உதவியாளர் நிலையில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமும் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் சகாயம் தெரிவித்துள்ளார்.