நில அபகரிப்பு: வீரபாண்டி ஆறுமுகம் மகன், உதவியாளர் சரண்
சேலம்: நில அபகரிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மற்றும் அவரது உதவியாளர் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
சேலம் டவுனில் நகைக் கடை நடத்தி வரும் பிரேம்நாத் என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் உள்ளிட்டோர் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மகன் முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா, உதவியாளர் கவுசிகபூபதி உள்பட 16 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதில் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய தம்பி மகன் சுரேஷ்குமார், முன்னாள் உதவி கலெக்டர் பாலகுரு மூர்த்தி, முனனாள் தாசில்தார் ஸ்ரீரெங்கநாதன், சேலம் மாநகர திமுக துணை செயலாளர் முரளி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வீரபாண்டி ராஜா மற்றும் கவுசிகபூபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றிருந்தனர்.
கைதான வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் விடுதலையானார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி வீரபாண்டி ராஜாவும், கவுசிகபூபதியும் சேலம் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.
கவுசிகபூபதி மீது சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு மற்றும் தாசநாயக்கன்பட்டி பாலமோகன் நிலத்தை அபகரித்தது ஆகிய 2 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளிலும் கவுசிகபூபதி சேலம் 4-வது மற்றும் 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்.