உசிலம்பட்டி அருகே ஊராட்சித் தலைவர் பதவி ரூ. 10 லட்சத்துக்கு ஏலம்-6 பேர் கைது
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காடையாம்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட நடந்த முயற்சியை போலீஸார் முறியடித்தனர். 6 பேரை இதுதொடர்பாக போலீஸார் கைது செய்துள்ளனர். ரூ. 10 லட்சம் பணத்துடன் தப்பியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பல கிராமங்களில் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஏலம் விடும் முயற்சிகள் சூடு பிடித்துள்ளன. இதையடுத்து மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்புகளை முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பதவி ஏலம் நடைபெறலாம் என்று சந்தேகப்படும் கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தீவிரக் கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், உசிலம்பட்டி அருகே காடையாம்பட்டி என்ற கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவியை ஏலம் விட முயற்சி நடந்தது. தலைவர் பதவியை ரூ. 10 லட்சம் வரை ஏலம் விட பேரம் பேசப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர். இத்தகவல் கிடைத்ததும் அங்கு போலீஸார் விரைந்தனர். ஏலம் விடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதேசமயம், ரூ. 10 லட்சம் வரை பணத்துடன் வந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களையும் கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை அருகே ஊராட்சி தலைவர் பதவி ஏலம்
இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில், இரண்டு ஊராட்சித் தலைவர்களின் பதவியை ஏலத்தில் விட நடந்த முயற்சி குறித்து, விசாரணை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்துள்ளது ஜமின் செரியலூர் மற்றும் இனாம் செரியலூர். இந்த இரண்டு ஊராட்சிகளில், தலைவர் பதவியை ஏலத்தில் விட ரகசிய முயற்சி நடந்துள்ளது.
இதனையடுத்து, அங்குள்ள வழிபாட்டுத் தலத்தின் வளர்ச்சிக்காக, ஏலத் தொகையைக் கொடுக்க, முக்கிய பிரமுகர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்த தகவல், மாநிலத் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தருமாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு, மாநிலத் தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் போட்டியிட்டு, நேர்மையாக வெற்றி பெறுவது தான் மக்களாட்சித் தத்துவம். அவ்வாறு, வெற்றி பெறாமல் பதவிக்கு வருவது மக்களாட்சித் தத்துவத்தை கேலிக் கூத்தாக்கிவிடும். எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.