வெற்றி வாய்ப்பை கணிக்க ஜோதிடர்களை நோககி படையெடுக்கும் வேட்பாளர்கள்
தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி மன்றங்களில் போட்டியிட உள்ள அரசியல்வாதிகள் வேட்பு மனுக்களை வாங்கி வருகின்றனர். இந்த மனுக்களுடன் இணைக்க வேண்டிய படிவங்கள் குறித்து அதிகாரிகளுடன் விளக்கம் கேட்டு படிவங்களை கண்ணும் கருத்துமாக பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை தயார் செய்து வருகிறது. இதனால் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இந்த தேர்தல் யுத்த களமாக இருக்கும் என்ற அச்சம் உருவாக தொடங்கிவிட்டது.
பணம், செல்வாக்கு, பதவி, போன்றவைகளுக்கு தேர்தல் களம் தான் பதில் சொல்லும். மக்கள் செல்வாக்கு உள்ளதோ, இல்லையோ அரசியல்வாதிகளை பொறுத்தவரை அதிர்ஷ்டம் இருந்தால் வெற்றிதான் என்ற மனக்கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்காக தேர்தலில் நிற்பவர்கள் தற்போது தங்களது ஜாதகங்கள், மற்றும் பெயர் ராசி, போன்றவற்றிக்கு அரசியல் யோகம் உள்ளதா என்ற ஜோதிடக்கணக்கிற்கு தாவி வருகின்றனர். வெற்றி பெருவதற்கான பரிகார பூஜை செய்வதும், வேட்பு மனு தாக்கல் செய்யும நாள், பிரச்சார நாள், எந்த திசையில் இருந்து தொடங்கினால் நல்லது என்று கேட்டு வருகின்றனர். இதனால் கேரள ஜோதிடர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.