எவரெஸ்ட் சிகரத்தைப் பார்க்கச் சென்று விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள்
காத்மாண்டு: காத்மாண்டு அருகே நடந்த விமான விபத்தில் உயிரிழந்த எட்டு தமிழர்களும் எவரெஸ்ட் சிகரத்தைக் காணவும், பசுபதிநாதர் கோவிலைக் காணவும் ஆவலோடு சுற்றுலாவாக சென்று உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் இன்று காலை நடந்த கோரமான விமான விபத்தில் திருச்சி மத்திய கட்டுமான சங்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணன், கணகசபேசன், காட்டூர் மகாலிங்கம், தனசேகரன், மருதாச்சலம், கிருஷ்ணன், மணிமாறன் ஆகிய எட்டு பேரும், வட மாநிலத்தைச் சேர்ந்த சாயா மேத்தா, பங்கஜ் மேத்தா ஆகியோரும் உயிரிழந்தனர்.
திருச்சியைச் சேர்ந்த எட்டு பேரும் டெல்லிக்கு வந்திருந்தனர். அங்கு நடந்த கட்டுமான சங்க மாநாட்டில் கலந்து கொண்டஅவர்கள் பசுபதிநாதர் கோவில், எவரெஸ்ட் சிகரம் ஆகியவற்றைக் காண விரும்பி நேபாளம் சென்றனர்.
ஆனால் அவர்களது சுற்றுலா சந்தோஷம் சோகத்தில் மூழ்கி, மரணத்திற்கு வித்திட்டு விட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பேரும் மற்றும் மேத்தா தம்பதியினரும் காத்மாண்டுவில் உள்ள கிராண்ட் ஹோட்டலுக்கு சனிக்கிழமை மாலை வந்துள்ளனர். இதுகுறித்து ஹோட்டல் மேலாளர் புர்பா ஷெர்பா கூறுகையில், சனிக்கிழமை மாலை அனைவரும் வந்தனர்.ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் டெல்லியிலிருந்து அவர்கள் வந்தனர். அக்டோபர் 27ம் தேதி அவர்கள் நேபாளத்தை விட்டு கிளம்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது. உள்ளூர் சுற்றுலா ஏஜென்சி மூலம் அவர்கள் எவரெஸ்ட் சிகர சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் கிளம்பினர் என்றார்.
காத்மாண்டுவிலிருந்து இன்று காலை 6.30 மணிக்கு இவர்களது விமானம் கிளம்பியது. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து காத்மாண்டு திரும்பியது. அப்போதுதான் வழியில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு பின்னர் விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் காத்மாண்டு திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றைப் பிரேதப் பரிசோதனை செய்து, அடையாளம் கண்ட பின்னர் ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அவசர உதவிக்கு
அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை:
00-977-1-4423702 (நேரடி)
00-977-1-4410900 - எக்ஸ்டென்ஷன்- 4109
00-977-1-4414990 - எக்ஸ்டென்ஷன்- 4109
00-977-1-4411699 - எக்ஸ்டென்ஷன்- 4109