தேமுதிகவில் சீட் கிடைக்காத திருநங்கை சுயேட்சையாக போட்டி
சேலம்: சேலத்தில் கவுன்சிலர் பதவிக்கு சீட் தர தேமுதிக மறுத்துவிட்டதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
சேலம் மாநகராட்சி 18 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திருநங்கையான ராதிகா விருப்பம் தெரிவித்து மனு செய்திருந்தார்.
ஆனால், தே.மு.தி.க வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
சேலம் சூரமங்கலம் சுப்ரமணியபுரத்தில் உள்ள திருநங்கைகளுக்கான கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ராதிகா நிருபர்களிடம் பேசுகையில்,
தே.மு.தி.க கட்சி துவங்கப்பட்ட நாள் முதல் அந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன். ஒவ்வொரு மாநாட்டுக்கும், பொதுக் கூட்டத்துக்கும் ஆட்களை திரட்டிச் சென்றுள்ளேன்.
ஆனால், அந்த கட்சி எங்களை (திருநங்கை) ஒரு காட்சி பொருளாகவே பயன்படுத்தி வந்துள்ளது. எனக்கு சீட் கொடுக்கவும் மறுத்துவிட்டது. இதனால் சேலம் மாநகராட்சி 18வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றார்.