ஊரக பகுதிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டு: தேர்தல் ஆணையம் உத்தரவு
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதி வாக்காளர்களுக்கு நான்கு ஓட்டு உள்ளதால் நான்கு வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு முதன் முறையாக வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது. புகைப்பட வாக்காளர் பட்டியலும் இந்த தேர்தலில் தான் முதன் முதலாக பய்ன்படுத்தப்படுகிறது. நகர்ப்புறப் பகுதிகளில் மட்டும்தான் வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது, கிராமப் பகுதிகளில் வாக்குச் சீட்டு முறை பின்பற்றப்படும்.
ஊரக உள்ளாட்சிக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் இதுவரை ஒரு வார்டுக்கு பல உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் ஊரக பகுதி வாக்காளர்கள் 4 ஓட்டுகள் முதல் அதிகபட்சமாக 6 ஓட்டுகள் வரை போட வேண்டும்.
இந்த தேர்தலில் அனைத்து கிராம பஞ்சாயத்து வார்டும் ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஊரக உள்ளாட்சிகளில் வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் என 4 ஓட்டுகள் மட்டுமே போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வாக்காளர்கள் குழப்பம் அடையாமல் இருக்க 4 வண்ணங்களில் வாக்குச் சீட்டுகள் தயாரிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு இளம்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீ்ட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன.
வேட்பு மனு தாக்கல் முடிந்து அக்டோபர் 3-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர் வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.