பிரச்சினைகளுக்கு மத்தியில் 79வது பிறந்த நாளைக் கொண்டாடும் பிரதமர்
பிரதமர் பதவிக்கு வந்த பின்னர் அவர் நான்காவது முறையாக தனது பிறந்த நாளை வெளிநாட்டில் கொண்டாடுகிறார். எந்த ஒரு இந்தியப் பிரதமரும் இந்த அளவுக்கு அதிகமாக வெளிநாட்டில் தனது பிறந்த நாளை கொண்டாடியதில்லை என்பதால் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் அங்கு ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றினார். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட எந்த முக்கிய நாடுகளின் தலைவர்களையும் தனியாக அவர் சந்திக்கவில்லை. ராஜபக்சே, ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட சிலரைத்தான் அவர் சந்தித்தார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிராங்பர்ட் வழியாக இந்தியா திரும்புகிறார் பிரதமர். அப்போது விமானத்தில் தனது பிறந்த நாளை அவர் கொண்டாடுகிறார்.
பிரதமர் பதவிக்கு வந்த பின்னர், வெளிநாடு ஒன்றில் தனது பிறநத நாளை பிரதமர் கொண்டாடுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு 2004ல் நியூயார்க்கிலிருந்து ஜெனீவா திரும்பும் வழியில் விமானத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
பின்னர் 2008ல் வாஷிங்டனில் கொண்டாடினார். 2009ல் மறுபடியும் அமெரிக்காவிலிருந்து ஜெனீவா திரும்பும் வழியில் கொண்டாடினார். இப்போது 4வது முறையாக நடுவானில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் மன்மோகன் சிங்.
இருப்பினும் தனது பிறந்த நாளை சந்தோஷமாக கொண்டாட முடியாத சூழலில்தான் இருக்கிறார் பிரதமர். சரமாரியான ஊழல் புகார்கள், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கிடுக்கிப் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு, அமைச்சர்களுக்கிடையிலான மோதல்கள், மிஸ்டர் க்ளீன் என்ற இமேஜ் சிதறிப் போய் விட்டது உள்ளிட்ட காரணங்களால் பிரதமரின் கொண்டாட்டங்களில் உண்மையான குதூகலம் இல்லை என்பதே உண்மை.