'ஜீன்ஸ்' பேண்ட்டில் வந்து ஆலோசனையில் பங்கேற்ற இளைஞர் காங். தலைவர் யுவராஜா!
காங்கிரஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோஷ்டிப் பூசல்தான் என்றாலும் கூட கதர்தான் காங்கிரஸின் அடையாளமாக இருக்கிறது. நாட்டில் கதர் ஆடை அணிவதை காங்கிரஸ்காரர்கள்தான் ஓரளவாவது கடைப்பிடித்து வருகிறார்கள்.
கதரும், காங்கிரஸும் பிரித்துப் பார்க்க முடியாத அம்சங்கள். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் ஜீன்ஸ் பேண்ட்டுடன் மாநில நிர்வாகி ஒருவர் கலந்து கொண்டது முனுமுனுப்பை கிளப்பியுள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பல்வேறு கோஷ்டித் தலைவர்களை உள்ளடக்கிய 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு நேற்று மாலை கூடி விவாதித்தது. இன்றும் இக்குழுக் கூட்டம் நடந்தது. காங்கிரஸ் தேசிய செயலாளரும், மேலிட பார்வையாளருமான கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், தங்கபாலு, ஜி.கே.வாசன், ஜெயந்திநடராஜன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். ஆர்.பாலசுப்பிரமணியம், முன்னாள் தலைவர் குமரி அனந்தன், எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, ஜே.எம்.ஆரூண், கோபிநாத் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். ப.சிதம்பரம் மட்டும் கூட்டத்திலிருந்து மிஸ்ஸிங்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை ஆண் தலைவர்களும் கதராடையில் வந்திருந்தனர். யுவராஜா மட்டும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கலக்கலாக வந்திருந்தார். இது பலரது கண்களையும் உறுத்தியது. காங்கிஸ் கட்சிக்கும், ஜீன்ஸ் பேண்ட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தொண்டர்களிடையே முனுமுனுப்பு எழுந்தது.
ஒரு வேளை 'இளைஞர்' காங்கிரஸ் தலைவர் என்பதால் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டாரா 'யுவ'ராஜா...!