வேலூர்: இறந்த பேரனின் உடலை ஆற்றில் வீசிய முதியவருக்கு அடி-உதை
குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் இறந்த குழந்தையை ஆற்றில் வீசிய முதியவரை அப்பகுதி மக்கள் பிடித்து நையப் புடைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கவுண்டன்ய ஆற்றின் குறுக்கே காமராஜர் பாலம் உள்ளது. இன்று காலை 8. 15 மணியளவில் அந்த பாலத்தில் முதியவர் ஒருவர் கையில் ஒரு பெரிய துணி மூட்டையுடன் பதட்டத்துடன் நடந்து சென்றார். பாலத்தின் மையப் பகுதிக்கு சென்ற அவர் திடீர் என்று தன் கையில் வைத்திருந்த மூட்டையை ஆற்றில் வீசிவிட்டுச் சென்றார்.
அதைப் பார்த்த பொதுமக்கள் முதியவர் மீது சந்தேகம் அடைந்தனர். உடனே சிலர் முதியவரைப் பிடித்தனர், சிலர் ஆற்றுக்குள் இறங்கி துணி மூட்டைய எடுத்தனர். மூட்டையைப் பிரி்த்துப் பார்த்தபோது அதில் இறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் இருந்தது. இதைப் பார்த்த மக்கள் திடுக்கிட்டனர். சிலர் ஆத்திரத்தில் முதியவருக்கு தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரை காவல் நியைத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது,
என் பெயர் நடராஜன். கோப்பம்பட்டியில் வசிக்கிறேன். கணவரைப் பிரிந்து வாழும் எனது மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. அதில் ஆண் குழந்தை இறந்துவிட்டது. அதைத் தான் நான் ஆற்றில் வீசினேன் என்றார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.