சைனீஸ் உணவைச் சாப்பிட்டு புட் பாய்சனால் பாதிக்கப்பட்ட 600 ஐஐடி- மும்பை மாணவர்கள்
மும்பை: கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சைனீஸ் உணவு சாப்பிட்ட ஐஐடி மும்பை மாணவர்கள் 500 முதல் 600 பேருக்கு காய்ச்சல், தலைவலி, உடம்புவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதற்கு உணவு தான் காரணம் என்று அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஐஐடி மும்பையில் உள்ள எண் 12, 13 மற்றும் 14 ஆகிய 3 விடுதிகளில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு அபூர்வமாக சைனீஸ் உணவு கொடுத்துள்ளனர். மாணவர்களுக்கு பிரைட் ரைஸ், கோபி மன்ச்சூரியன், சாதம், தால், கோழிக்கறி வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு மறுநாள் காலையில் இருந்து தலைவலி, உடம்புவலி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு சில மாணவர்கள் உடல்நிலை தான் பாதிக்கப்பட்டது. நேரம் ஆக ஆக ஏராளமான மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டது. சுமார் 500 முதல் 600 மாணவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 6 பேரைத் தவிர மற்றவர்கள் சிகிச்சை பெற்றுக் கொண்டு விடுதிக்கு திரும்பினர்.
6 மாணவர்கள் மட்டும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கல்லூரி விடுதியில் கொடுக்கப்பட்ட உணவால் தான் தங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறினர். விடுதியில் வழங்கப்படும் தண்ணீரை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாணவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டதற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வழங்கப்பட்ட உணவு தான் காரணம் என்று ஐஐடி அதிகாரிகளும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இந்த 3 விடுதிகளில் சுமார் 2,000 மாணவர்கள் தங்கியுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பு படிப்பவர்கள். 3 விடுதிகளுக்கும் பொதுவாக ஒரு மெஸ் தான் உள்ளது. அங்கு ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது.