பரமக்குடி நீதிவிசாரணை- கருப்புக் கொடி போராட்டத்தால் நீதிபதி சம்பத் பாதியிலேயே திரும்பினார்
தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்காக செப்டம்பர் 11-ம் தேதி பரமக்குடி சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி சம்பத் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக பரமக்குடி சென்ற நீதிபதி செவ்வாய்கிழமையன்று மூன்று பேரின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் ம.பச்சேரி என்ற கிராமத்தில் உயிரிழந்த பள்ளி மாணவன் பழனிக்குமார் வீட்டிற்கும் நீதிபதி செல்வதாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமத்தினர் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து புதன்கிழமையன்று காக்கநேந்தல், வல்லவராயநேந்தல், மற்றும் மஞ்சூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நீதிபதி சம்பத் சந்திப்பதாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாளாக ம.பச்சேரி கிராமத்தில் வீடுகள் தோறும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டிருந்ததால் அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் காக்கநேந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லாமலேயே நீதிபதி சம்பத் மதுரை திரும்பினார்.
நீதிபதியின் இந்த செயலுக்கு பரமக்குடி ஐந்துமுனை அருகே உள்ள பொன்னையாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்த வந்துவிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்றது நியாயம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை சென்றுள்ள நீதிபதி சம்பத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 14 பேரையும் சந்தித்து விசாரணை நடத்த உள்ளார்.
இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சென்னை அடையாறு முன்னாள் உதவி ஆணையர் செந்தில் வேலனிடமும் நீதிபதி சம்பத் விசாரணை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.