2ஜி விவகாரத்திற்கும், சிதம்பரத்திற்கும் தொடர்பில்லை: பிரதமருக்கு பிரணாப் விளக்கக் கடிதம்
2ஜி ஊழலைத் தடுக்கத் தவறிவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் குறை கூறி பிரதமர் அலுவலகத்துக்கு நிதியமைச்சகம் ஒரு கடிதம் அனுப்பியதால் பிரச்சனை வெடித்தது. இந் நிலையில் பிரணாப் மற்றும் சிதம்பரம் இருவரும் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய பிரணாப், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான கொள்கை முடிவுகள் பாஜக ஆட்சியில் எடுக்கப்பட்டவை தான்.
இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஒட்டுமொத்தமான ஒரு குறிப்பைத் தான் நிதியமைச்சகம் தயாரித்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியது. அதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறவில்லை.
மேலும் அந்தக் குறிப்பில் உள்ள கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்துக்களும் அல்ல என்றார்.
இந்தப் பேட்டியின்போது சிதம்பரம், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபலும் உடனிருந்தனர்.
பிரதமருக்கு பிரணாப் விளக்கக் கடிதம்:
முன்னதாக சிதம்பரத்தைக் குறை கூறி நிதியமைச்சகம் தன்னிச்சையாக கருத்துத் தெரிவிக்கவில்லை என்று விளக்கி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பிரணாப் முகர்ஜி நேற்று ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
மேலும், 2ஜி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்று அதில் தெரிவித்துள்ளார்.
அந்த கடிதத்தில் 4 பக்கங்களில் விளக்கம் அளித்துள்ளார். இதன் நகல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நிதியமைச்சகம் எழுதிய கடிதத்தால் தான் சிதம்பரத்திற்கு இத்தனை பிரச்சனை வந்துள்ளது என்ற நினைப்பை மாற்றத் தான் பிரணாப் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதில் 2ஜி ஊழல் விவகாரத்திற்கும் ப. சிதம்பரத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2ஜி ஊழல் குறித்த கடிதமும், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 18 பக்கங்கள் கொண்ட குறிப்பையும் நிதியமைச்சகம் தன்னிச்சையாக தயாரிக்கவில்லை என்றும். சட்ட அமைச்சகம், தொலைத் தொடர்பு அமைச்சகம், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து தான் அந்த குறிப்புகள் எல்லாம் கொடுக்கப்பட்டன என்று பிரணாப் தனது விளக்கக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
மேலும் நிதியமைச்சகத்தின் கடிதத்தை வைத்து யாரையும் குற்றம் சாட்டிவிட முடியாது என்றும் பிரணாப் அதில் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சரவை செயலாளருடன் கலந்தாலோசித்த பிறகே நிதியமைச்சகம் அந்த கடிதத்தை எழுதியது. கடந்த மார்ச் மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் அமைச்சரவை செயலாளரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிதி, தொலைத்தொடர்பு, சட்டம், சுற்றுச்சூழல் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்திற்குப் பிறகு தான் நிதியமைச்சகம் 12 பத்தி கொண்ட கடிதத்தை எழுதி அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பியது. அவர் அதை திருப்பிக் கொடுக்கையில் 14 பத்திகளாக இருந்தது என்று பிரணாப் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதம் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில்,
பிரணாப் முகர்ஜி பார்த்த பிறகு தான் அந்த கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. அதை அவர் சரிபார்த்திருக்கிறார் என்றால் அதை அவர் அனுப்பியதாகத் தானே அர்த்தம் என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.