எப்பிஐயிடமே குண்டு வாங்கி பென்டகன், வெள்ளை மாளிகையை தகர்க்க அல் கொய்தா சதி
பாஸ்டன்: வெடிமருந்துகள் நிரப்பிய ரிமோட் கன்டரோல் விமானம் மூலம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையை தகர்க்க சதி செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதி கைது செய்யப்பட்டான்.
அமெரிக்காவைச் சேர்ந்தவன் ரெஸ்வான் பெர்தௌஸ் (26). நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்றவன். அல் கொய்தா அபிமானி. கடந்த ஆண்டில் இருந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவன்.
வெடிமருந்துகள் நிரப்பிய ரிமோட் கன்டரோல் விமானங்கள் மூலம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையை தகர்க்க சதி செய்ததற்காக ரெஸ்வான் கைது செய்யப்பட்டான். ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்த வெடிகுண்டு தயாரிக்கத் தேவையான பொருட்களை வினியோகிக்க முயன்றதாகவும், செல்போன்களை வெடிகுண்டு ரிமோட்டாக மாற்றியதாகவும் அவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பெர்தௌஸ் பென்டகன், வெள்ளை மாளிகை உள்பட நாட்டிற்கு எதிராக பல வன்முறைச் சம்பவங்கள் நடத்த நீண்ட காலமாக திட்டமிட்டுள்ளான் என்று அமெரிக்க அட்டார்னி கார்மென் ஆர்டிஸ் தெரிவித்தார்.
அல் கொய்தா தீவிரவாதிகள் போன்று நடித்த எப்பிஐ ஏஜென்டுகளிடம் இருந்து பெர்தௌஸ் ஒரு ரிமோட் கன்ட்ரோல் விமானம், சி4 ரக வெடிகுண்டுகள், சிறிய ரக ஆயுதங்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளான். அதை வைத்து வாஷிங்டனில் தரைவழியாக தாக்குதல் நடத்துவது தான் அவன் திட்டம்.
அந்த ரிமோட் கன்ட்ரோல் விமானம் மூலம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகையின் கோபரத்தை தகர்த்த சதி செய்தான். ஆனால் எப்பிஐ ஏஜென்டுகள் என்று தெரியாமல் அவர்களிடமே வெடிபொருட்கள் வாங்கியதால் சிக்கிக் கொண்டான்.
அவனை பாஸ்டன் அருகே உள்ள பிராமிங்காமில் வைத்து எப்பிஐ ஏஜென்டுகள் கைது செய்தனர்.