உணவுப் பணவீக்கம் மீண்டும் உயர்வு... பிரணாப் கவலை!
இந்த உயர்வு கவலையளிப்பதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பருப்பு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வின் காரணமாக, கடந்த 17 ம் தேதி வரையிலான காலத்தில் உணவுப் பணவீக்கம் 9.13 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உருளைக்கிழங்கு, பருப்புகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இந்த வாரத்தில்.
உணவு அல்லாத எண்ணெய் வித்துகள், தாதுக்கள், நூலிழைகள் போன்ற பொருட்களின் விலையேற்றம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வரை 12.89 சதவீதத்திலிருந்து இப்போது 17.42 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் உணவுப் பண வீக்கமும் 9 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது. வெங்காயம் 17.40 சதவீதம், காய்,கனிகள் 11.98 சதவீதம், அரிசி 3.48 சதவீதம், பருப்பு 4.86 சதவீதம் என அதிகரித்துள்ளன.
செப்டம்பர் 10 ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், உணவுப் பணவீக்கம் 9.47 சதவீதத்திலிருந்து 8.84 சதவீதமாக குறைந்து இருந்தது.
பணவீக்கத்ததை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து,வங்கி கடன்கள் மீதான வட்டிவிகிதங்களை 12 முறை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
'அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகும் இரட்டை இலக்கத்தை தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள உணவுப் பண வீக்கம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது," என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.