'பிர்லா' தலைவருடையதைப் போல போலி கிரெடிட் கார்டு!
இதுதொடர்பாக மும்பை போலீசில் பிர்லா தலைவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குமார் மங்கலம் பிர்லாவுக்கு கடந்த மாத கணக்கு அறிக்கைகள் கிடைக்கும்போது இந்த போலி கடன் அட்டை விவகாரம் தெரியவந்துள்ளது.
அவரது பெயரில், அவருடைய கார்டைப் போலவே அச்சு அசலாக போலி கார்டைத் தயார் செய்துள்ள ஒருவர், இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி 2.86 லட்ச ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கியுள்ளார்.
இதுகுறித்து பிர்லா குழுமத்தின் அதிகாரி ஜி.கே.துல்சியானி என்பவர் போலீசில் இந்த புகாரை அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பெங்களூர் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்த மும்பை போலீசார் ஒரு தனிப்படையை அமைத்துள்ளனர்.
எப்படித் தயாரிக்கிறார்கள்?
இந்த மாதிரி போலியாக கிரெடிட் கார்டு தயாரிப்பதை கிரெடிட் கார்டு குளோனிங் என்கிறார்கள். இப்போது பெருமளவில் நடக்கிறது இந்த குளோனிங், அதுவும் பிரபலமானவர்கள், முக்கியஸ்தர்கள் பெயர்களில். சமீபத்தில்கூட டெண்டுல்கர் பெயரில் கிரெடிட் கார்டு வைத்திருந்த ஒருவரை போலீசார் பிடித்தது நினைவிருக்கலாம்.
ஒருவருடைய ஒரிஜினல் கிரெடிட் கார்டு சில நிமிடங்களுக்கு மட்டும் கையில் கிடைத்துவிட்டால் போதும், எளிதில் இம்மாதிரி போலி கார்டுகளைத் தயார் செய்யலாம் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள். இதற்கென உள்ள பேஜர் சைஸ் ஸ்கேன் கருவியில் ஒரிஜினல் கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தால், அதில் உள்ள அத்தனை விவரங்களும் கருவியில் பதிவாகிவிடுமாம். பின்னர் போலி கார்டில் உள்ள காந்த பட்டையில் இதே கருவி மூலம் அந்த தகவல்களைப் பதிவு செய்து வைத்துவிடுவார்களாம்.
எனவே யாரிடமும் உங்கள் கிரெடிட் கார்டை கொடுக்குமுன், ஒரு முறைக்கு நூறு முறை யோசிப்பது நல்லதல்லவா!