உங்களால் வெறும் 32 ரூபாய்க்கு குடும்பம் நடத்த முடியுமா?- அலுவாலியாவுக்கு அருணா ராய் கேள்வி!
இருவரும் உணவுக்கு உரிமை என்ற பிரசாரக் குழுவில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த பிரசாரக் குழு உறுப்பினர்கள் என்ற வகையில், அலுவாலியாவுக்கு அவர்கள் திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில் அருணா ராயும், மந்தரும் கூறியிருப்பதாவது:
யார் ஒருவர் ஒரு நாளைக்கு 32 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்களோ அவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவர்கள். அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வர மாட்டார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் திட்டக் கமிஷன் ஒரு அபிடவிட்டைத் தாக்கல் செய்துள்ளது. மேலும் 32 ரூபாய் சம்பாதிப்பவர்களை வசதி படைத்தவர்கள் என்ற ரீதியிலும் அவர்கள் கூறியுள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது.
ஏன் வறுமைக் கோடு என்ற ஒன்றை வைத்துள்ளீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. வறுமைக் கோடு என்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இதை மத்தியஅரசு வசதியாக மறந்து விட்டது.
இந்த நாட்டின் ஏழை மக்கள் குறித்த கவலை திட்டக் கமிஷனுக்கு கிஞ்சித்தும் இல்லையோ என்ற அச்சம் எழுகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரசாரத்தை பாஜக அரசு மேற்கொண்டது. ஆனால் அதற்கு நேர்மாறான இந்தியாவைத்தான் நாடு கண்டது. தற்போதும் அதே போன்ற ஒரு முரட்டுப் பிடிவாதமான கொள்கையை இந்த அரசும் கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது.
ஊரகப் பகுதிகளில் ஒரு நாளைக்கு 25 ரூபாய் சம்பாதித்தால் அவர் வசதியானவர், நகர்ப்புறத்தில் 32 ரூபாய் சம்பாதித்தால் வசதியானவர், அதை வைத்துக் கொண்டு தாராளமாக குடும்பம் நடத்தலாம் என்று திட்டக் கமிஷன் கூறுவது ஏற்க முடியாதது. அப்படியென்றால் திட்டக் கமிஷன் துணைத் தலைவரான உங்களால் அதுபோல குடும்பம் நடத்த முடியுமா?
மேலும் திட்டக் கமிஷன் உறுப்பினர்களுக்கு ஏன் இந்த குறைந்த பட்சத் தொகையை விட 115 மடங்கு அதிக சம்பளம் தரப்பட வேண்டும்? 32 ரூபாய் கொடுத்தால் போதாதா? இது போக இலவச வீடு, சுகாதாரவசதிகள், ஏராளமான சலுகைகளும் உங்களுக்கும், உங்களது உறுப்பினர்களுக்கும் உள்ளது. அதை நாங்கள் குறி்ப்பிட விரும்பவில்லை.
சர்வதேச நிதியம், உலக வங்கி என பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த உங்களால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை எப்படி கடைப்பிடிப்பது, நிர்வகிப்பது என்பது நிச்சயம் தெரிந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே ஏழைகள் மற்றும் அவர்களது ஒரு நாள் வருமானம், பொருளாதார நிலைமை, வறுமைக் கோடு ஆகியவை குறித்த உங்களது கருத்துக்களை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம் எனக் கூறியுள்ளனர்.
அன்னா ஹஸாரேவைப் போலவே அருணா ராயும் ஒருலோக்பால் மசோதாவை மத்திய அரசிடம் கொடுத்தார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அன்னா ஹஸாரேவுக்குக் கிடைத்த முக்கியத்துவம் அருணா ராய்க்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.