போக்குவரத்து, மின் வாரியம், ஆவின் ஊழியர்களுக்கு 10% முதல் 20% போனஸ்
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை மற்றும் ஆவின் உள்ளிட்ட மாநில அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் நிறுவனம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் அடக்கம்.
இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.4,300 வரை கிரேடு ஊதியம் பெற்று பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் (குருப்-சி, குரூப்-டி பணியாளர்கள்) சம்பளத்தில் ரூ.10 ஆயிரத்தை உச்சவரம்பாக கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் போனஸும், 1.67 சதவீதம் கருணைத் தொகையும் (மொத்தம் 10 சதவீதம்) வழங்கப்படும்.
அதே நேரத்தில் அதிக நிதி ஆதாரம் உள்ள லாபம் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீதத்துக்கு அதிகமாக 20 சதவீதத்துக்கு குறையாமல் வழங்கலாம் என போனஸ் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தகைய நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு போனஸாக 8.33 சதவீதமும், கருணைத் தொகையாக 11.67 சதவீதமும் வழங்கப்படும்.
கடந்த நிதி ஆண்டில் (2010-2011) முழு காலமும் பணியாற்றாமல் குறைவாக பணியாற்றியவர்களுக்கு அதற்கு தகுந்தபடி போனஸ் கணக்கிடப்படும்.
தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், ஆவின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டக்கலை கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றுவோருக்கான போனஸ் பற்றிய அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறை மூலமாக தனியாக ஆணை வெளியிடப்படும்.
அதிகளவு ஊதியம் பெறும் "ஏ மற்றும் பி' பிரிவு ஊழியர்களுக்கான சிறப்பு போனஸ் தொகைக்கான உத்தரவுகள் தனியாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் போனஸ் குறித்து இதேபோன்றதொரு உத்தரவையே தமிழக அரசு வெளியிட்டது. லாபம் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மட்டுமே 20 சதவீதம் அளவுக்கு போனஸ் தரப்படும் என உத்தரவில் கூறப்பட்டு இருந்தாலும், ஊழியர் சங்கங்களும், நிறுவனங்களும் தனியாக பேச்சு நடத்தி 20 சதவீத போனஸைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அதே போல பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.