சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸார் கோஷ்டி மோதல்-அலுவலகத்தை சூறையாடினர்
சென்னை சத்தியமூ்ர்த்தி பவனில் பலமுறை கோஷ்டி மோதல்கள் நடந்துள்ளன. வேட்டி கிழிப்பு, சட்டைக் கிழிப்பு, அலுவலகம் சூறை, உச்சகட்டமாக அரிவாள் வெட்டு வரை போயுள்ளனர் காங்கிரஸ் கோஷ்டியினர்.
வழக்கமாக தேர்தல்களின்போதும், நிர்வாகிகள் நியமனத்தின்போதும் போர்க்களமாக மாறி விடும் சத்தியமூர்த்தி பவன். அதன் பாரம்பரியம் குறித்து சற்றும் கவலைப்படாமல் வெட்டுக் குத்து, வேட்டி கிழிப்பு, தாறுமாறாக சூறையாடுதல், ஆபாசமாக பேசி சண்டை போடுதல் ஆகியவற்றில் ஈடுபடுவார்கள் காங்கிரஸ் கோஷ்டியினர்.
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி வேட்பாளர்கள் சிலரை மாற்றியது தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் வன்முறை வெடித்தது. வேட்பாளர்களை மாற்றியதை எதிர்த்து அவர்கள் சார்ந்த கோஷ்டியினர் சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் வன்முறையாக மாறியது. அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த தங்கபாலு படம், பெயர்ப் பலகைகள், நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர்.இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
நேற்று செல்வப் பெருந்தகை கோஷ்டியினர், காரைக்குடியிலிருந்து சீட் மறுக்கப்பட்டு, நியாயம் கேட்டு வந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலரை சிறை வைத்துப் பூட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் இன்று அடிதடி ரகளை ஆகியிருப்பது மூத்த காங்கிரஸாரை வருத்தமுறச் செய்துள்ளது.