ஆயுத பூஜை, விஜயதசமி- ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நவராத்தி பண்டிகையின் 10-வது நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கெட்டவற்றை நல்லவை வெற்றி கொள்ளும் விழாவாக தசரா கருதப்படுகிறது. இந்த விஜயதசமி பண்டிகை மக்களுக்கு மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கொடுப்பதாக இருக்கட்டும். நாட்டிலுள்ள பிரிவினைவாத சக்திகள், தேசவிரோத சக்திகளுக்கு எதிராக நாம் அனைவரும் கைகோப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
நவராத்திரி விழாவையும், விஜயதசமி திருநாளையும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கெங்கும் நிறைந்து நிற்கும் அன்னை பராசக்தியை, துணிவைத் தரும் துர்க்கையாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், வாழ்வுக்கு வளம் சேர்க்க அறிவைத் தரும் கலைமகளாகவும் 9 நாள்கள் வணங்கி வழிபட்டு, சரஸ்வதி பூஜையையும், ஆயுத பூஜையையும் கொண்டாடி 10-வது நாளை வெற்றித் திருநாளான விஜயதசமி திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்று உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தொழிற்கருவிகளை தொழிலாளர்கள் பூஜை செய்து, தங்கள் தொழில் வளர அன்னையின் அருள் வேண்டி வழிபடும் திருநாளாக ஆயுதபூஜை அமைகிறது.
இத் திருநாள்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவரும் உடல் நலமும், பொருள் வளமும், அறிவுத் திறனும் பெற்று வெற்றி மேல் வெற்றி பெற்றிடவும், அன்னை பராசக்தியின் பரிபூரண அருளைப் பெற்று அனைத்து நலன்களும் அடைந்திடவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.