இலங்கையிலிருந்து 2 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த 8 பேர் கைது
சென்னை: இலங்கையிலிருந்து 2 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை கடத்தி வந்த 8 பேர் கொண்ட கும்பலை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கையிலிருந்து பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படவுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இலங்கையிலிருந்து இன்று வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளை தீவிர பரிசோதிக்க உத்தரவிடப்பட்டது.
இன்று அதிகாலை முதலே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அதிகாலையில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று, கொழும்பிலிருந்து வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது எட்டு பேர் மீது சந்தேகம் வந்தது.
இதையடுத்து அவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த விசாரணையின்போது அவர்கள் உருப்படியான தகவலைக் கூறாமல் இழுத்தடித்து வந்தனர். இதையடுத்து அவர்களை முறைப்படி அதிகாரிகள் விசாரித்ததைத் தொடர்ந்து உண்மையைக் கக்கினர்.
இதையடுத்து அவர்களது உடமைகளை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது யாருக்கும் தெரியாத வகையில் பெண்கள் அணியும் தங்க வளையல்களை அவர்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மொத்தம் 2 கிலோ எடை கொண்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள் அவர்களிடமிருந்து சிக்கின. இதை மீட்ட அதிகாரிகள், போலீஸாரிடம் எட்டு பேரையும் ஒப்படைத்தனர்.
இந்த எட்டு பேரும் கூலிக்காக இதுபோல நகை பொருட்களைக் கடத்தி வரும் குருவிகள் என்று கூறப்படுகிறது.