அமெரிக்காவில் 25,000 டாலருக்கு புரோக்கரை அமர்த்திய பர்வேஷ் முஷரப்!
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்த போது, அந்நாட்டு அதிபராக இருந்தவர் பர்வேஷ் முஷரப். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த முஷரப், பாகிஸ்தானிலிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டார். இப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள பல்கலை கழகங்களில் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் முஷரப்பை பற்றி அவ்வப்போது சில ருசிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் முஷரப், அங்கு தனக்கென ஒரு ஏஜன்ட் அல்லது புரோக்கரை 25,000 டாலர் மாதச் சம்பளத்துக்கு அமர்த்தியுள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி கையெழுத்தானது.
அமெரிக்க சட்டப்படி பதிவு எண் 6062ஐக் கொண்ட இந்த ஒப்பந்தம் 2012 மார்ச் 30ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த புரோக்கர் பெயர் ராசா புக்காரி என பதிவாகியுள்ளது. இவர் அமெரிக்க காங்கிரஸின் முன்னாள் உறுப்பினர்.
25,000 டாலர் வீதம் அடுத்த 7 மாதங்களுக்கு புக்காரிக்கு சம்பளம் அளிக்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்பட்டால், ஒப்பந்தத்தை நீட்டி கொள்ள முடியும். முதல் 2 மாதங்கள் மற்றும் கடைசி மாதத்தின் தொகை முன்தொகையாக வழங்க வேண்டும். மேலும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள எல்லா சட்டத் திட்டங்களுக்கும், முஷரப் மற்றும் ராச புக்காரி ஆகிய 2 பேரும் உட்பட்டு நடப்பதாகவும் கையெழுத்திட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் முஷரப் செல்வாக்கிழந்த நிலையில் இருந்தாலும், உலக நாடுகளில் முஷரப் இன்னும் ஒரு அரசியல் தலைவராக நீடிப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த நிலையைத் தக்க வைக்கவே இவ்வளவு சம்பளத்துக்கு ஆள் அமர்த்தியுள்ளார்.