அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது-மோடி திடீர் ஆதரவு, லாலு எதிர்ப்பு
இதற்காக ஒரு பஸ் ரதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல வாகன டிசைனரான திலீப் சாப்ரியா தான் இந்த ரதத்தை உருவாக்கியுள்ளார். புனேவில் உள்ள அவரது தொழிற்சாலையில் இந்த ரதம் உருவாக்கப்பட்டது.
ஜன் சேத்னா ரத் யாத்ரா என்ற பெயரிலான இந்த யாத்திரை 38 நாட்கள் நடக்கவுள்ளது. கிட்டத்தட்ட 12,000 கி.மீ. தூரம் அத்வானி பயணம் செய்யவுள்ளார். தினந்தோறும் சுமார் 300 கி.மீ. தூரம் பயணம் செய்யவுள்ள அத்வானி, 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் யாத்திரை மேற்கொள்கிறார்.
பிகாரின் சிதாப்தியாரா என்ற இடத்திலிருந்து அத்வானியின் யாத்திரை தொடங்கியது. இது சோஷலிசவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமாகும். அத்வானியின் ரத யாத்திரையைத் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அத்வானி தனது மகள் பிரதிபாவுடன் ஹெலிகாப்டரில் சிதாப்தியாரா வந்தார். பின்னர் ஜெயப்பிரகாஷ் நாராயண் வாழ்ந்த வீட்டுக்கு சென்ற அத்வானி அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையடுத்து ரத யாத்திரையை முதல்வர் நிதிஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அத்வானியின் ரத யாத்திரை 6 கட்டங்களாக நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை அவர் ரத யாத்திரை மேற்கொள்கிறார். மொத்தம் 100 மாவட்டங்கள் வழியாக அவர் செல்கிறார்.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 14 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். குஜராத்தில் 5 நாட்கள் ரத யாத்திரை மேற்கொள்கிறார். இந்த யாத்திரையின்போது அத்வானி அயோத்தி, சோம்நாத் போன்ற நகரங்களுக்கு செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் அவருடைய ரத யாத்திரையை முதல்வர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.
அடுத்த மாதம் 20ம் தேதி டெல்லியில் இந்த ரத முடிவடைகிறது. அன்று டெல்லியில் மாபெரும் பொதுக் கூட்டத்துக்கும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
இந்த யாத்திரை மூலம் தன்னை 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்திக் கொள்ள அத்வானி முயல்வதாகக் கருதப்படுகிறது. ஆனால், இதை ஆர்எஸ்எஸ் எதிர்த்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் நாக்பூர் சென்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்த அத்வானி, நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் பாஜக சார்பில் அடுத்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன்னை முன்னிறுத்த முயன்று வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அத்வானியின் ரத யாத்திரைக்குப் போட்டியாக குஜராத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
இந் நிலையில் முதலில் அத்வானியின் யாத்திரையை குஜராத்தின் கரம்சாட் நகரில் மோடி துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அதை அத்வானி தவிர்த்துவிட்டார். இந் நிலையில் இந்த யாத்திரையை மோடி எதிர்ப்பாளரும் பிகார் முதல்வருமான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் நிதிஷ்குமார் துவக்கி வைத்தார்.
மோடி திடீர் ஆதரவு:
இந் நிலையில் அத்வானியின் ரத யாத்திரிக்கை நரேந்திர மோடி திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜக தொண்டர்களுக்கு ஒரு திறந்த கடிதமும் எழுதியுள்ளார். அதில், இந்த யாத்திரை இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும் என்று கூறியுள்ளார் மோடி.
லாலு எதிர்ப்பு:
இதற்கிடையே இந்த யாத்திரைக்கு எதிராக பாட்னாவில் ஆளுநர் மாளிகையை நோக்கி இன்று ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்த யாத்திரை ஒரு விளம்பரம்தான். அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் பிரதமர் பதவி மீதுதான் ஆசை. இதில் பிகார் முதல்வர் நிதீஷ்குமாரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவும்கூட அவர்கள் பக்கம் உள்ளனர்.
ஆர்எஸ்எஸ், பாஜக கொள்கைக்கு எதிரான ஜெய்ப்ரகாஷ் நாராயணன் பிறந்த மண்ணில் இருந்து யாத்திரை மேற்கொள்வதன் மூலம் அவர் பிறந்த மண்ணை அவமதித்துவிட்டனர் என்றார் லாலு.
ராம ஜென்ம பூமி யாத்திரை உள்பட இதுவரை அத்வானி 5 யாத்திரைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அவரது 6வது யாத்திரையாகும்.