மூலப்பொருட்கள் விலை உயர்வு: தீபாவளி இனிப்பு விலை 5% அதிகரிப்பு!
தீபாவளி என்றால் வீட்டில் பலகாரங்கள் செய்யும் காலம் மலையேறிப்போய்விட்டது. யார் அடுப்பில் வெந்து இனிப்புகள் செய்வது என்று பெண்கள் நினைக்கிறார்கள். அதனால் கடைக்கு சென்றோமா, ஸ்வீட் பாக்ஸ் வாங்கினோமா அதை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தோமா என்பது தான் இன்றைய நிலை.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இனிப்பு வகைகள் விலை 5 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த விலை உயர்வு குறித்து அடையார் ஆனந்தபவன் நிறுவன உரிமையாளர் கே. சீனிவாசராஜா கூறியதாவது,
இந்த தீபாவளிக்கு பல வகையான ஸ்பெஷல் இனிப்புகள் தயார் செய்கிறோம். இனிப்பு வகைகள் செய்யத் தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் தீபாவளி இனிப்புகளின் விலை கிலோவுக்கு ரூ. 20 அதிகமாக இருக்கும்.
பாதாம், முந்திரி வகை இனிப்புகள் செய்ய அதிகம் செலவாகிறது. வடமாநிலத்தில் முந்திரி பற்றாக்குறை ஏற்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தவிர தமிழகத்தில் இனிப்பு வகைகள் தயார் செய்யும் மாஸ்டர்கள், கூலி ஆட்கள் கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது. அதனால் வேறு மாநிலங்களில் இருந்து அதிக சம்பளத்திற்கு ஆள் கூட்டி வந்து தான் இனிப்பு செய்ய வேண்டியுள்ளது.
இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு தான் இனிப்பு வகைகளின் விலை உயர்த்தபடுகிறது என்றார்.
இந்த தீபாவளிக்காக ஆவின் 5 வகையான இனிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.
இனிப்பு வகைகளின் விலை விவரம்(250 கிராம்),
முந்திரி அல்வா - ரூ. 100
முந்திரிகேக் - ரூ. 120
நட்ஸ் அல்வா - ரூ. 95
சாக்லேட் பர்பி - ரூ. 80
பாதாம்மிக்ஸ் கேக் - ரூ. 85
மேற்கூறிய இனிப்புகள் தவிர எப்பொழுதும்போல் பால்கோவா, குலாப் ஜாமூன், மைசூர்பாகு ஆகியவை கிலோ ரூ. 125க்கு விற்கப்படும். மொத்தமாக இனிப்பு வகைகள் வாங்க விரும்புபவர்கள் நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் முன்கூட்டியே ஆர்டர் கொடுக்க வேண்டும்.
இனிப்புகள் குறித்து தகவல் பெற விரும்புவோர் 1800425 3300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஆவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.