பி.எஸ்.எல்.வி -சி18 ராக்கெட் நாளை விண்ணில் ஏவ தயார்
சென்னை: இந்தியாவின் பி.எஸ்.எல்.வி -சி 18 ராக்கெட் நாளை காலை 11 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
வளிமண்டலம் மற்றும் பருவநிலை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ள மெகா-ட்ராபிக்யூஸ் செயற்கை கோள் உட்பட 4 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக பி.எஸ்.எல்.வி -சி18 ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ள இந்த ராக்கெட்டின் 50 மணிநேர கவுன்ட்-டவுன் நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது.
பி.எஸ்.எல்.வி- சி18 ராக்கெட்டில் வளிமண்டலம் மற்றும் பருவநிலை ஆராய்ச்சி செயற்கை கோளான மெகா-ட்ராபிக்யூல், இந்திய-பிரன்ஸ் நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் பூமியில் இருந்து 867 கி.மீ. உயரத்தில் பூமியை சுற்றி வரும் வகையில் விண்ணில் விடப்படும்.
இதனுடன் 10 கிலோ எடை கொண்ட எஸ்.ஆர்.எம்.சாட் என்ற மற்றொரு செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த நானோ செயற்கைக்கோள், கார்பன் டை ஆக்சைடை கண்காணிப்பதன் மூலம் புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும்.
3வதாக கப்பல் போக்குவரத்திற்கு உதவும் வகையில் 28.7 கிலோ எடை கொண்ட செயற்கை கோளான செஸ்சல்சாட்-1 விண்ணில் செலுத்தப்படுகிறது. 4வதாக கான்பூர் ஐ.ஐ.டி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ எடை கொண்ட ஜீக்னு என்ற நானே செயற்கை கோள், பூமியை படம் பிடிக்கும் வகையில் சிறந்த தொழிற்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது அனுப்பப்படுகிறது.
இன்று இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் முடிவடைந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதற்கு தயாராக உள்ளது.