விளைச்சல் அதிகரிப்பு: பாவூர்சத்திரத்தில் பல்லாரி விலை கடும் வீழ்ச்சி
பவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் பகுதியில் பல்லாரி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விற்பனையாகாமல் குடோனில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
கீழப்பாவூர் ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் ஆண்டுதோறும் பல்லாரி பயிரிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு பல்லாரி மகசூல் அதிகரித்துள்ளது. இங்கு விளையும் பல்லாரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இரண்டு மாதத்துக்கு முன் பல்லாரி மகசூல் துவங்கியபோது ஒரு கிலோ ரூ.12 வரை விற்பனையானது.
வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்ததால் வெளியூர் வியாபாரிகள் வயல்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் கொள்முதல் செய்தனர். ஓணம் பண்டிகை வரை பல்லாரி சீரான விலையில் விற்பனையானது. அதன்பின் கிலோ ரூ.10 ஆக குறைந்தது. மகராஷ்டிரா, பூனே மாநிலங்களில் பல்லாரி மகசூல் அதிகரிப்பால் அங்குள்ள பல்லாரி ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்திற்கு அதிக அளவில் விற்பனைக்கு வருவதால் பாவூர் பகுதி பல்லாரியை வாங்க வெளியூர் வியாபாரிகள் வருவதில்லை. உள்ளூர் வியாபாரிகள் சிலர் வந்தாலும் கிலோ ரூ.6க்கு கேட்கின்றனர்.
மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் சரக்கு வண்டி வாடகை, ஏற்று கூலி, இறக்கு கூலி என கூடுதல் செலவாகிறது. மேலும் பல்லாரி விற்பனை பணத்தில் நூறுக்கு 10 ரூபாய் கமிஷன் பிடித்தம் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் தற்போது 1 கிலோ ரூ.8 ஆக கொள்முதல் செய்யப்படுகிறது. வெளியூர் விற்பனை இல்லாததால் பல்லாரி வாங்க ஆள் இல்லாமல் வயல்களிலும், குடோன்களிலும் பல்லாரி வெங்காயம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. மகசூல் இருப்பு பணி முடிவடைந்தும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.